Logo

என் கடன் பணி செய்து கிடப்பதே

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி

[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]

கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003

Logo

தமிழியக்கத்தலைவர் முனைவர் இரா.இளவரசு நினைவு நூலகம்

விதிமுறைகள்

நூலகம் இயங்கும் நேரம் :முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை

நூலக விதிமுறைகள் :
  1. மாணவ, மாணவியர் ஓய்வு நேரங்களிலும் இடைவேளை நேரங்களிலும் நூலகரிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  2. மாணவ, மாணவியர் தமக்குத் தேவைப்படும் நூல்களின் பெயர்களையும், அந்நூல்களுக்குப் பட்டியலில் உள்ள எண்களையும் சிறுதாளில் குறித்துத் தருதல் வேண்டும். அவ்வாறு குறித்துத் தந்த நூல்களை நூலகர் குறிப்பிடும் நேரத்தில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
  3. மாணவ, மாணவியர் ஒவ்வொருவர்க்கும் நான்கு நூல்கள் வழங்கப்பெறும்.
  4. ஒருவர் ஒரு நூலைப் பதினைந்து நாட்களுக்கு மேல் வைத்திருத்தல் கூடாது. பதினைந்து நாட்களுக்கு மேலும் நூல் தேவைப்படின், நூலகரிடம் தந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அந்நூலை மீண்டும் கொடுப்பதற்கு நூலகர் மறுக்கலாம்.
  5. நூலகரிடம் தந்து புதுப்பித்துக் கொள்ளாமல் ஒரு நூலைப் பதினைந்து நாட்களுக்கு மேல் வைத்திருப்போருக்கு நாள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் தண்டம் விதிக்கப்பெறும்.
  6. நூல்களைப் பெற்றுச் செல்வோர் அவற்றுக்குப் பழுது நேராமல் அழகுணர்ச்சியுடன் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
  7. நூல்களில் கோடிடல், குறியிடல், சிதைத்தல் முதலியன் செய்தலாகாது. நூல்களைப் பெறும்போதே நூலிலுள்ள குறைபாடுகளை நூலகரின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். திருப்பிக் கொடுக்கும் போது காணப்பெறும் சிதைவுகளுக்கு நூல் எடுத்துச் சென்ற மாணவரே பொறுப்பு ஏற்க வேண்டி வருவதோடு அந்நூலுக்கு நூலின் விலையைப்போல் மூன்று மடங்குப் பணம் அவரிடமிருந்து வசூலிக்கப் பெறும்.
  8. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கல்லூரியின் கடைசி வேலை நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நூலக நூல்களை நூலகரிடம் திருப்பித் தருதல் வேண்டும்.
  9. மாணவ, மாணவியர் கல்லூரியிலிருந்து நீங்கி சான்றிதழ் பெற்றுச்செல்லும் காலத்தில் நூலகத்திலிருந்து பெற்ற நூல்கள் அனைத்தையும் நூலகரிடம் தந்து நிலுவை இல்லாச் சான்றிதழ் பெற்று முதல்வரிடம் தருதல் வேண்டும். அதற்குப் பின்னரே, அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பெறும்.
  10. ஒரேநூல் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களால் விண்ணப்பிக்கப்பெற்றால் யார் முதலில் விண்ணப்பித்தாரோ அவருக்கு வழங்கப்பெறும்.
  11. மாணவர் நூலகத்திலிருந்து பெறும் நூல்களைத் தம் கைச்சுவடியில் பதிவு செய்து கொண்டு நூலகரின் ஒப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். நன்னடத்தைச் சான்றிதழ் வழங்குங்கால் மாணவர் பெற்ற நூல்களும் நோக்கப்பெறும்.
  12. கல்லூரிப் பேராசிரியர்கள் பத்து நூல்கள் வரை நூலகரிடமிருந்து பெற்றுச் செல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு மாத இறுதியில் நூல்களைத் திருப்பித் தந்து விடுதல் வேண்டும்.
  13. நூலகத்தில் பெற்ற நூல்களை நூலகரிடம் தந்து நிலுவை இல்லாச் சான்றிதழ் பெற்றுத் தந்தவர்களுக்கு மட்டுமே தேர்வக நுழைவுச் சீட்டு வழங்கப்பெறும்.
பார்வை நூல்கள்:

பார்வை நூல்களை எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.

Avatar

த.பவானி

நூலகர்